Friday, January 4, 2008

இன்னொரு ஜென்மம் இருந்தால்......

நாளைய விடியல் நமக்குண்டா என்பது தெரியாத மனிதனின் மனதில் மட்டும் பல நூறு வருடங்கள் வாழப்போகும் கனவுகள். கையளவு இதயத்தில் கடலளவு ஆசைகள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலங்களில் மனிதனின் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள்! இந்த மனிதர்களிடம்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! இறைவன் வகுத்த பாதையை மாற்றி தனக்கென புதுப் பாதையை வகுத்துக் கொண்டான்.

ஒரு மனிதன் எந்த சாதியைச் சேர்ந்தவனாக, எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், குடிசைவீட்டு கோவிந்தனாகவோ கோடீஸ்வரன் என்ற கொம்பனாகவோ இருந்தாலும் அவன் தனது தாயின் கருவறையில் இருந்து மண்ணில் விழும்போது ‘குழந்தை பிறந்திருக்கிறது’ என்றுதான் சொல்வோம். ஒரு பார்ப்பனன் பிறந்திருக்கிறான். ஒரு இஸ்லாமியன் பிறந்திருக்கிறான் ஒரு கிறிஸ்தவன் பிறந்திருக்கிறான் ஒரு தலித் பிறந்திருக்கிறான். இல்லை ஒரு கோடீஸ்வரன் பிறந்திருக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை.

ஆம். முதலில் மனிதனுக்குக் கடவுள் வைத்த பெயர் ‘குழந்தை’ இந்தக் குழந்தை வளரும்போது பெற்றோரால் பெயரிடப்பட்டு பின்பு அதற்கு சாதிப்பெயரைச் சொல்லி சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகிறது.
சாதி, மதம், பொருளாதாரம் இவற்றால் மனிதர்களே மனிதர்களை வேற்றுமைப் படுத்துகிறார்கள். ஆனால் விதியின் மீது பழியையும் இறைவன் மீது பொறுப்பையும் சுமத்துகிறார்கள்.

‘இந்த உலகமே தனக்குச் சொந்தமாகி விடாதா?’ என்ற மண்ணாசை கொண்ட மனிதன் விண்ணிலும் பட்டா போட பத்திரத்தோடு படையெடுக்க ஆரம்பித்த விட்டான். (செவ்வாயில் நிலம் விற்கப் போவதாகச் சொல்கிறார்கள். முந்துபவர்களுக்கு நிலாவுக்குச் சென்றுவர இலவச பயணச் சீட்டுக் கிடைக்கலாம். பதிவு செயயுங்கள்.)

இப்படி ஆடாத ஆட்டமெல்லாம் போட்டுவிட்டு பிறரையும ஆடவைத்து விட்டு இறுதியில் ஆறடி குழிக்குள் அதாவது பூமித்தாயின் கருவறையில் விழும்போது அவனை ‘பிணம்’ என்றோ ‘சவம்’ என்றோதான் சொல்கிறோம்.

ஆக ஒரு மனிதனுக்கு பிறக்கும்போது குழந்தை என்றும் வாழும்போது மனிதன் என்றும் இறந்தபின் பிணம் என்றும் சொல்லப்படும் மூன்று நிலைகளை இறைவன் நிர்ணயித்துள்ளான். ஆனால் இவன் ‘மனிதன்’ என்ற நிலையில் நிர்ணயித்துக் கொண்ட வேறுபாடுகள் பாகுபாடுகள் எத்தனை எத்தனை.

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நல்லவர்கள் சோதிக்கப் படுவதையும் தீயன செய்பவர்கள் நல்லவிதமாக வாழ்வதையும் நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது ‘நல்லதுக்கே காலமில்லை’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. இல்லை ரஜினி டயலாக்கை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

‘இப்படி அயோக்கியத்தனம் செய்பவர்களெல்லாம் அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள்.’ என்ற சபித்தல்களை அன்றாடம் ஆங்காங்கே கேட்கலாம். ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்குக் கணவனாக வரவேண்டும்.’ (இங்கே கணவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது)

இதுபோன்ற வேண்டுதல்களை உறவுகளிடையே கூட நாம் கேட்க முடியும். நமது கடந்த கால, நிகழ்கால நினைவுகளை சற்று அசைபோட்டுப் பார்த்தால் நம் அனைவரது நெஞ்சிலும் யாராவது ஒருத்தர் நிலைத்திருப்பார்கள். அவர்கள் அடுத்த ஜென்மத்தில் ஒரு சகோதரனாக சகோதரியாக நண்பனாக தாயாக தந்தையாக நமக்கு அமைய வேண்டும் என்ற எண்ணம் நம்மை அறியாமலேயேகூட நம் மனதில் எழக்கூடும்.

அதே போல் நாம் யாரையாவது எதிர்பாராமல் சந்தித்து அவருடன் அதிக நட்பு கொள்வது, எதிர்பாராத உறவுகள் இவையெல்லாம் நிகழும்போதுகூட ‘இது முன்ஜென்மத்து உறவு’ என்று சொல்கிறோம்.

ஆனால் முன் ஜென்மம் அடுத்த ஜென்மம் இவையெல்லாம் நிஜமா???

நிஜம்தான். அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? மேலே படியுங்கள். உங்களுக்கும் அந்த நம்பிக்கை வரலாம்.

இன்னொரு ஜென்மம் இல்லையென்றால் வெண்மேகமாக விடிவெள்ளியாக என்றெல்லாம் வானத்தில் பிறக்கப்போவதாகப் பாடவேண்டாம். கண்டிப்பாக மறுஜென்மம் எடுத்து மனதிற்குப் பிடித்தவர்களைச் சந்திக்கலாம்.

ஆனால் இந்த மறுஜென்மப் பிறவி நமது முன்ஜென்ம வாழ்வின் பலன் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இறைவன் வகுத்த வழியில் மனிதன் என்ற நிலைதவறாது வாழ்ந்தால் நமக்கும் அடுத்த ஜென்மம் நற்பிறவியாக அமையும். இல்லையென்றால் முன்ஜென்மத்தில் அவரவர் விதைத்த விதையை அடுத்த ஜென்மத்தில் அறுவடை செய்ய நேரிடும்.

அப்பொழுதுதான் தெரியும் நமது வாழ்க்கை வரம் பெற்றதா இல்லை சாபம் பெற்றதா என்பது. இந்த மறுஜென்மம் என்பது நமக்கு இந்த யுகத்திலும் கிடைக்கலாம் அல்லது அடுத்த யுகத்திலும் கிடைக்கலாம்.

இந்த யுகங்கள் என்புது ஒன்றா? இரண்டா? யுகங்கள் மொத்தம் நான்கு. அவை
1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)

இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.

71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.

14 மனு கொண்டது ஒரு கற்பம்.

ஒரு கற்பம் என்பது 429,40,80,000 ஆண்டுகள். இந்தக் கணக்குப்படி உலகம் தோன்றி 644,71,73,000 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது.

இப்படி முப்பது கற்பங்கள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாவது கற்பமான வாமதேவ கற்பம் முடிந்து இரண்டாவது கற்பமான சுவதேவராக கற்பம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் மூன்று யுகங்கள் முடிந்து நாலாவது யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

8 யுகங்கள் சேர்ந்த நாட்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள்

பிரம்மாவின் ஆயுள் 100 ஆண்டுகள் (2,92,000 யுகங்கள்)

விஷ்ணு - 5,84,000 யுகங்கள்

உலகம் ஒருபோதும் முழுமையாக அழிந்து போவதில்லை. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் அவை மீண்டும் மறுசுழற்சி முறையில் புதுப்பிக்கப் படுகிறது. மீண்டும் கற்காலம்….பொற்காலம்…கணினிகாலம் என்று காலச்சக்கரம் சுழல ஆரம்பிக்கிறது.

ஒரு யுகத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மறு யுகத்திலும் நடக்கும் என்று சொல்லப் படுகிறது. நாஸ்டர்டாம் போல் அடுத்த நூற்றாண்டில் என்ன நடக்கும் என்று சொல்லும் ஆரூட வல்லுநர்களுக்கு தனது முந்தைய ஜென்மத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அவர்களது உறங்கிக் கிடக்கும் மூளையின் மறுபகுதி விழித்தெழுந்து படம் போட்டுக் காட்டிவிடுகிறதாம்.

இந்த ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகளை நாமும் நன்கு நினைவு வைத்தக் கொள்வோம். ஒருவேளை அடுத்த யுகத்தில் நமக்கு மறுபிறவி ஏற்பட்டால் ஆருடம் சொல்லப் பயன்படும். (மனிதனாகப் பிறந்தால் மட்டும்.)

முப்பது கற்ப காலங்கள்

1.வாமதேவ கற்பம்
2.சுவதேவராக கற்பம்
3.நீல லோகித கற்பம்
4.ரந்தர கற்பம்
5.ரௌரவ கற்பம்
6.தேவ கற்பம்
7.விரக கிருஷ்ண கற்பம்
8.கந்தற்ப கற்பம்
9.சத்திய கற்பம்
10.ஈசான கற்பம்
11.தமம் கற்பம்
12.சாரஸ்வத கற்பம்
13.உதான கற்பம்
14.காருட கற்பம்
15.கௌரம கற்பம்
16 நரசிம்ம கற்பம்
17 சமான கற்பம்
18 ஆக்நேய கற்பம்
19 சோம கற்பம்
20. மானவ கற்பம்
21.தத்புருஷ கற்பம்
22. வைகுண்ட கற்பம்
23. லெச்சுமி கற்பம்
24. சாவித்திரி கற்பம்
25. கோரம் கற்பம்
26. வராக கற்பம்
27. வைராஜ கற்பம்
28. கௌரி கற்பம்
29. மகோத்வர கற்பம்
30 பிதிர் கற்பம்

இன்னொரு ஜென்மம் இருக்கிறது. அப்பொழுதும் நாம் பிறந்து அனைவரிடமும் அன்போடு இருப்போம்.

கனிஷ்கா தென்காசி

Friday, November 16, 2007

போவோமா ஊர்கோலம் ஏழுலகம் எங்கெங்கும்

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இளவரசன் இளவரசியை பூதத்திடமிருந்து காப்பாற்றி கொண்டு வந்தான் என்று நாம் நிறைய கதைகளில் படித்திருப்போம். அந்த ஏழ்கடல் எவை என்பது எல்லோருக்கும் தெரியுமா?

இது உபநிடத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்

இந்த ரகசியம் ஏழ்கடல்களை மட்டுமல்ல ஏழு உலகங்களைப் பற்றியும் சொல்கிறது. அவை என்னவென்று நாமும் தெரிந்து கொள்வேமே!

முதல் உலகம்:

ஜம்பூத்வீபம் - இதுதான் நாம் வாழும் பூமி

2.பிலட்சத்தீவு
3.சால்மலித்தீவு
4.குசத்தீவு
5.கிரௌஞ்சத்தீவு
6.சாகத்தீவு
7.புஷ்கரத்தீவு

.
இதுதான் ஏழு உலகங்கள். இதுபோக கடவுளுக்கென்று ஒரு உலகமும் இருக்கிறது. அதுதான் வைகுண்டம் - கடவுள் உலகம்-இங்குதான் இறைவன் இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது
ஏழு கடல்கள்

1. உப்புக்கடல்
2.இக்ஷ சமுத்திரம் (கரும்புச் சுவையுடயது)
3.மது சமுத்திரம் (தேன் சுவையுடையது) இதற்கு சுராசமுத்திரம் என்ற பெயரும் உண்டு
4.நெய் கடல்
5.பாற் கடல்
6.தயிர் கடல்
7.இளநீர் கடல்

ஜம்பூத்வபம் பற்றி நமக்குத் தெரியும். அதுதான் நமது பூமி.

மற்ற ஆறு உலகங்களைப் பார்ப்போமே!
இவையெல்லாம் பூமியிலிருந்து எத்தனை மைல்தூரத்தில் இருக்கிறது என்று கேட்டுவிடாதீர்கள். இவை பல லட்சம் அல்ல பல போடி மைல்கள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் பூமியின் தென்துருவத்தில் இருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்த உலகங்களைக் காணமுடியுமாம். (கனவிலும் கற்பனையிலும் சென்று வரலாமே)

ஒவ்வொரு உலகத்திலும் ஏழு கண்டங்கள் ஏழு மலைகள் ஏழு நதிகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல அங்கே ஆட்சிபுரிந்தவர்களும் ஆட்சிபுரிபவர்களும் கடவுளின் பேரன்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பிலட்சத்தீவு - (பிலட்சம் - மரங்கள்)

கண்டங்கள் -------- மலைகள் ------- நதிகள்

வயசம் -------- மணிகூடம் ------- அருணா
சீலம் -------- வச்சிரகூடம் ------- ரமணா
சுபத்திரம் -------- இந்திரசேனம் ------- ஆங்கிரசு
சாந்தம் -------- சோதிடமா ------- சாவித்திரி
ஷேமம் -------- தூம்ப்ரவர்ணம் ------- சுப்ரபாதா
அபயம் -------- இரணியகிரிவம் ------- ருதம்பரா
ரிதம் -------- மேகமாலம் ------- சத்தியம்பரா

இந்த உலகத்தில் இந்து மசிக்குவன் தனது மனைவியுடன் முதன்முதலில் குடியேறி அரசாட்சி செய்தான். இவனது பரம்பரை அம்ஸர், பதங்கர், ஊர்த்துவாயனர், சத்தியாகர் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கின்றனர். இந்த உலகுக்கு அடுத்து இருப்பது இக்ஷசமுத்திரம்.

அடுத்தது சால்மலித்தீவு - இங்கு சால்மலி என்னும் மரங்கள் இருக்கின்றன.

கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்

சரோசனம் ------ சுவற்சம் ------ அனுமதி
சௌமனசியம் ------ சதசிருங்கம் ------ சினிவாலி
ரகணகம் ------ வாமதேவம் ------ சரசுவதி
தேவபெருகம் ------ குந்தம் ------ குரு
பாரிபத்ரம் ------ குமுதம் ------ அக்கினி
ஆப்பியாயனம் ------ புஷ்பவருஷம் ------ நந்தா
அபிக்கியாயனம் ------ சகசுருதி ------ முகுந்தா

இங்கு எக்கியாபாகு என்ற அரசன் முதன்முதலில் ஆட்சி செய்தான். அவனது பரம்பரையினர் சுருத்திரர், விசுந்தராயர், இஷ்டாந்தரர்.

இந்த உலகை அடுத்து இருப்பது சுராசமுத்திரம். இதன் சுவை தேன்போலவும் திராட்சை ரசம் போலவும் இருக்குமாம்.

குசத்தீவு

இங்கே குசஸ்தம்பங்கள் என்னும் மலைக்குன்றுகள் இருக்கின்றன. குன்றின் உச்சியில் ஒளி உண்டு. அந்த ஒளி சந்திரனைப்போல் குளிர்ச்சியாகவும் மின்மினிப் பூச்சிகளைப்போல் பளிச்சிடவும் செய்யும். இந்த ஒளியை அங்குள்ள மக்கள் வணங்குகிறார்கள்.

கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்

வசு ------ பெப்புரு ------ ரசகுல்லியை
வசுதனம் ------ சதசிங்கம் ------ மதுகுல்லியை
திரடருசி ------ பிப்பலம் ------ சுருதுவிந்தை
நாபிகுமுதம் ------ சித்திரக்கூடம் ------ மித்துருவிந்தை
சத்தியவிரதம் ------ தேவாகம் ------ வேதகற்பை
விப்பிரம் ------ ஊர்த்தரோமா ------ கிருதச்சுதா
வாமதேவர் ------ திரவிணம் ------ மந்திரமாலை

இங்கே இரணியரோமன் என்பவன் முதன் முதலில் ஆட்சி செய்தான். இவனது பரம்பரையினர் குலசர், கோவிதர், அபியுக்தர், குலகர்.

இதற்கு அடுத்து இருப்பது நெய்கடல்.

கிரொஞ்சத்தீவு

இங்கே கிரொஞ்சம் என்னும் பெரிய மலை இருக்கிறது. அதுபோக ஏழு மலைகள் உண்டு

கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்

நுமோதனம் ------ சுக்கிலம் ------ அபையா
துவகனம் ------ மர்த்தமானம் ------ அமிர்தவுகா
மேகபிஷ்டம் ------ போஜனம் ------ ஆரியகா
சுதானம் ------ உபபெருகணம் ------ தீர்த்தவதி
ரெஞ்சிஷ்டம் ------ ஆனந்தம் ------ பாத்திராவதி
லோகிதாரணம் ------ நந்தம் ------ பவித்தீர்வம்
வனஸ்பதி ------ சர்வதோபத்திரம் ------ சுக்கிலை

இங்கு ஆட்சி செய்தது கிருதபிரஷ்டன். இவனது பரம்பரையினர் குருவர் ரிஷபா, திரவினர், தேவா.

இதற்கடுத்து இருப்பது பாற்கடல். பிரளய காலத்தில் ஸ்ரீமன் நாராயணன் இங்குதான் தங்கியிருப்பாராம்.

சாகத்தீவு – சாகம் என்னும் மரங்கள் நிறைந்து காணப்படும் உலகம்

கண்டங்கள் ------ மலைகள் ------ நதிகள்

புரோசகம் ------ ஈசானம் ------ அநாகா
மனோசவம் ------ உருசிங்கம் ------ ஆயுர்த்தா
வெபானனி ------ பவபத்திரம் ------ உபயசிருஷ்டி
தூம்பராணிகம் ------ சதகோரம் ------ அமராசிதா
சித்திராகம் ------ சகஸ்திர சுரோதசு ------ பஞ்சதி
வெகுரூபம் ------ தேவபாலம் ------ சகஸ்திரசுதி
விசுவாசம் ------ மகாநசம் ------ நிசதுருதி

இங்கே ஆட்சி செய்தது மேதாதி. இவனது பரம்பரையினர் நிசவிருதர், சத்தியவிருதர், கானவிருதர், அனுவிருதர். இந்த உலகத்தை அடுத்து இருப்பது தயிர் கடல்.

புஷ்கரத்தீவு

புஷ்கரம் என்கிற தாமரை மலர் போன்ற ஒரு லட்சம் மலைக்குன்றுகள் இருப்பதால் இந்த உலகிற்கு இந்தப் பெயர் வந்தது. இந்த மலைக்குன்றுகளுக்கு நடுவே இமயமலை போன்ற மானசோத்தரகிரி என்ற பெரிய மலையும் இருக்கிறது.

இங்கே இரண்டு கண்டங்கள் உள்ளன. அவை ரமணகம் , யாதனம். இங்கு விதி கோத்திரன் ஆட்சிபுரிந்தான். இவனது பரம்பரையினர் ரமணகர், யாதனர். இவர்களை தேவர்கள் என்றும் இங்த உலகை தேவலோகம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

கடவுள் உலகம் - வைகுண்டம்

இந்த உலகின் சுற்றளவு 500 கோடி கிலேமீட்டர். நான்கு பக்கமும் புஷ்கரசூடம், வாமணம், அபராஜிதம் ,ரிஷபம் என்ற நான்கு மலைகள் இருக்கின்றன. இங்கே கற்பகவ விருட்சமாக பாரிஜாதமலர் உள்ளது. காமதேனு, ஐந்துதலைநாகம், பத்துதலை நாகம் எல்லாம் இங்கு உண்டு. இந்த உலகத்தில்தான் கடவுள் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

நமது பிறவி பூமியில் மட்டும்தானா?யார் கண்டது நமது அடுத்த பிறவி கிரொஞ்சத் தீவில்கூட இருக்கலாம்.கடவுள் உலகத்திற்குச் சென்றுதான் கேட்டு வரவேண்டும்.

ஆனால் அதற்கு முன்பு மனிதனுக்கு அடுத்த பிறவி என்பது உண்டா என்பதைதெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் யுகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.

யுகங்கள் பற்றிய செய்தி அடுத்த வலைப்பூவில் மலரும்.

kanishka
Instant dynamic Tamil News Portal